Tuesday, May 21, 2013

யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-009


சொல்கள் புணரும் வேளை
நின்ற சொல்லுடன் இணைய வரும் வேளை
வந்த சொல்லின் முதலெழுத்து
வல்லினமாக இருந்தால் மிகுவதும்
நின்ற சொல்லின் ஈற்றெழுத்தில்
வல்லினம் மெய்யெழுத்தாக இருந்தால்
வல்லின ஈற்றெழுத்துத் திரிவதும்
பார்த்து முடித்தாச்சு!
வல்லினம் மிகா இடங்களை
வரும் பகுதியில் காண்போமே!
அஃறிணைப் பன்மை விகுதியாம்
'கள்' என்பது நின்ற சொல்லானால்
குடிக்கின்ற மதுவாகப் பொருள் கொள்ளும்
அப்பதான் தெரியும்
"கள் + கள் = கள்கள்"
என்றமையாது என்பதை!
நானொரு முட்டாளுங்க
நாற்பத்திரண்டு அகவை வரை
"சொல் + கள் = சொற்கள்" என்று
பாவித்த முட்டாள் என்றால்
நினைத்துப் பாருங்களேன்!
"சொல் + கள்" என்ற புணர்வில்
வல்லினம் மிகாது என்பதையே
நினைவூட்ட விரும்புகிறேன்!
(சான்று: பக்கம்-54; யாப்பரங்கம்;
புலவர் வெற்றியழகன்; சீதை பதிப்பகம்;
சென்னை-600004; இந்தியா)
பல சொல் இணைந்த கூட்டம்
"சொற்கள்" அல்ல
"சொல்கள்" என்பதே சரியாம்!
"சொற்கள்" என்பதை
"சொல்லாகிய கள்(மது)" என்றே
பொருள் கொள்ள முடிகிறதாம்!
இப்படித்தான் பாருங்கோ
கல்கள், பல்கள், வில்கள்,
ஆள்கள், நாள்கள், கோள்கள்,
பொருள்கள் ஆகியவற்றிலே
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
சிறிய + காற்றாடி = சிறிய காற்றாடி
நல்ல + பிள்ளை = நல்ல பிள்ளை
தீய + செய்கை = தீய செய்கை
என்பவற்றிலே வரும்
குறிப்புப் பெயரெச்சம் அல்லது
பண்புச் சொல்களை அடுத்து வரும்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டாகப் பாரும்
காளையின் + பேரில் = காளையின் பேரில்
சிங்கத்தின் + பின் = சிங்கத்தின் பின்
ஆலின் + கீழ் = ஆலின் கீழ்
என்பவற்றிலே காண்பீர்
அஃறிணைப் பெயர்ச் சொல்களை
அடுத்து வரும் பின்னொட்டுகளில்
பேரில், பின், கீழ் என்பன வரின்
வல்லினம் மிகாது என்றறிவோம்!
எடுத்துக்காட்டுக்களாக
ஆசிரியர் + சார்பாக = ஆசிரியர் சார்பாக
மாணவர் + தொடர்பாக = மாணவர் தொடர்பாக
ஆகியவற்றிலே பாரும்
நின்ற பெயர்ச் சொல்லுடன்
"சார்பாக, தொடர்பாக" என்ற ஒட்டுகள்
வந்ததாலும் வல்லினம் மிகாது...
நொந்து + கொள் = நொந்து கொள்
நடந்து + கொண்டிரு = நடந்து கொண்டிரு
செய்து + பார் = செய்து பார்
கொய்து + காட்டு = கொய்து காட்டு
கொண்டு + போ = கொண்டு போ
ஒழிந்து + தொலை = ஒழிந்து தொலை
ஆகியவற்றிலே பாரும்
'செய்து' என்னும் வினையெச்சச் சொல்லை
அடுத்து வரும் துணை வினைகளான
கொள், கொண்டிரு, பார், காட்டு, போ, தொலை என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
சென்ற + போது = சென்றபோது
செய்த + படி = செய்தபடி
சொன்ன + படியால் = சொன்னபடியால்
ஆகியவற்றிலே பாரும்
பெயரெச்சத் தொடரின் ஒட்டுகளான
போது, படி, படியால் என்பன
வந்ததாலும் வல்லினம் மிகாது...
ஊர் + தோறும் = ஊர் தோறும்
என்ற வகையில் பாரும்
பெயர்ச் சொல்லை அடுத்து
'தோறும்' என்னும் ஒட்டு
வந்ததாலும் வல்லினம் மிகாது...
என்றறிந்தால் தவறு நிகழாதே!
எடுத்துக்காட்டின்றியும்
வல்லினம் மிகா இடங்களை
எடுத்துச் சொல்கிறேன் பாரும்...
எழுவாயாக நிற்கும்
பெயர்ச் சொல்களுடன் பாரும்
கூட, பற்றி, பொருட்டு, பால், குறித்து, தவிர ஆகிய
ஒட்டுகள் வரினும் வல்லினம் மிகாதாம்...
விடவும், காட்டிலும் ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
ஆ, ஆவது, ஏ, ஓ, என்று, போன்று ஆகிய
இடைச் சொல்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அடா, அடி ஆகிய சொல்களை
அடுத்து வரும் வல்லினமும் மிகாதாம்...
உள்ள, உரிய, தகுந்த ஆகிய
பின்னொட்டுகளை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
அகர உயிர் இறுதியில் உள்ள
அத்தகைய, இத்தகைய, எத்தகைய;
அன்றைய, இன்றைய, என்றைய;
அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட;
அப்போதைய, இப்போதைய, எப்போதைய;
மேற்கத்திய, கிழக்கத்திய, வடக்கத்திய, தெற்கத்திய;
நேற்றைய, இன்றைய, நாளைய என்னும்
பெயரெச்சங்களை அடுத்து
வரும் வல்லினமும் மிகாதாம்...
வந்து, சென்று, கண்டு, அழுது, வென்று
என்னும் வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
செயின், செய்தால் என்னும்
வாய்ப்பாட்டு வினையெச்சங்களில்
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மை, அப்பர், மாமன், மாமி,
அண்ணன், அண்ணி, தந்தை, தம்பி,
தங்கை, அக்காள் என்னும்
முறைப் பெயர்களை அடுத்து
வரும் வல்லினம் மிகாதாம்...
அம்மா, அப்பா, மாமா, மாமி,
அண்ணா, அண்ணி, தம்பி, தங்காய்,
அக்கா ஆகிய முறை விழிப் பெயர்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
நட, படி, பாடு, ஓடு ஆகிய
முன்னிலை ஏவல் ஒருமை வினைகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
அடேயப்பா, அய்யோ, அம்ம ஆகிய
வியப்புச் சொல்களை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
எடுத்துக்காட்டாக
அவள் + பெரியவள் = அவள் பெரியவள்
ஆடு + சிறியது = ஆடு சிறியது
கூழ் + போதாது = கூழ் போதாது
என்றமையும் முதல் வேற்றுமையாகிய
எழுவாய்த் தொடரில் சில இடங்களில்
வல்லினம் மிகாதாம்...
ஒடு, ஓடு என்னும்
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
விரிந்து வரும் பொழுது
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமையாகிய
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமை விரியில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
'உடைய' என்னும்
ஆறாம் வேற்றுமை உருபை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
"நா + காக்க = நா காக்க
(நாவைக் காக்க)" என்றவாறு
இரண்டாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
"கை + தட்டினான் = கை தட்டினான்
(கையால் தட்டினான்) என்றவாறு
மூன்றாம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
எழுவாய் உயர்திணையாக இருந்தாலும்
அஃறிணைப் பெயருடன்
வினைச்சொல் வந்தாலும்
நான்காம் வேற்றுமைத் தொகையில்
வல்லினம் மிகாதாம்...
ஐந்தாம் வேற்றுமைத் தொகையில்
இருந்து, நின்று என்னும் சொல்லுருபுகளை
அடுத்து வரும் வல்லினம் மிகாதாம்...
ஆறாம் வேற்றுமைத் தொகையில்
எழுவாய் உயர்திணையாயின்
வல்லினம் மிகாதாம்...
ஏழாம் வேற்றுமைத் தொகையிலும்
"அரசர் + கண் = அரசர் கண்" என்றவாறு
வல்லினம் மிகாதாம்...
"ஆடு + கோழி = ஆடு + கோழி
(ஆடும் கோழியும்) என்றவாறு
உம் என்னும் சொல் மறைந்து வரும்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"ஊறு + காய் = ஊறுகாய்" என்றவாறு
(ஊறிய/ ஊறுகின்ற/ ஊறும் காய்)
மூன்று காலங்களையும் உணர்த்தும்
வினைத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
"கார் + காலம் = கார் காலம்" என்றவாறு
பண்புத் தொகையில் வல்லினம் மிகாதாம்...
இப்படியே பார்த்தால்
இவை தான்
வல்லினம் மிகா இடங்கள்!
அடுத்து செய்யுளுக்கே உரிய
செய்யுள் விகாரம் பற்றியே
தொடரும் வரை காத்திரும்!
(தொடரும்)

முன்னையதைப் பார்க்க
http://paapunaya.blogspot.com/2013/04/008.html

Thursday, May 16, 2013

அடே! யாழ்பாவாணா!


பெண்/ஆண் மீது காதல் கொண்டதால்
கிறுக்கிக் கொள்ளலாம்...
கவிதை வரலாம்...
பாவல(கவிஞ)ராக முடியாது
தோழர்களே! தோழிகளே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மால
பாவல(கவிஞ)ராக முடியாதென
நீ எப்படிச் சொல்வாயென
என்னையும் நீங்களும் கேட்கலாம்!
நானும் தான் கேட்கிறேன்
பெண்/ஆண் மீதான காதலைத் தவிர
வேறெதனையும் வைத்துக் கிறுக்கலாமே!
வேறெதுவா?
மின்மினிப் பூச்சி ஒளியில
வாழும் ஏழைக் குடிசையை...
ஒரு பிடி அன்னத்திற்கு
துடிதுடிக்கும் உள்ளங்களை...
பெண்களின் கண்களில் இருந்து
வடிகின்ற கண்ணீர்த் துளிகளை...
பிறந்த உடலாக
குடிச்சுப் போட்டு அலையும் ஆண்களை...
மேலைநாட்டு ஈர்ப்பில்
சேலைகளைப் பறக்கவிட்டும்
ஆணாடைகளை அணிந்து
மது(பியர்) குடித்தும்
பொன்னிலை(கோல்ட் லீவ்ப்) புகைத்தும்
உலாவும் இன்றைய குமரிகளை...
வாக்கு வேண்டும் வரை
மக்களுக்காக குளிர்களியாக(ஐஸ்கீறீம்) உருகி
தேர்தலில் வெற்றி பெற்றதும்
வாக்களித்த மக்களை மறந்து போய்
நாடாளுமன்ற நாற்காலி(கதிரை)யைத் துடைக்கும்
பை நிரம்பப் பணம் சுருட்டும்
அரசியல்வாதிகளை...
இறைதொண்டு செய்வதாய்
மறைவில் மங்கை சுகம் காணும்
இறைதொண்டர்களை...
இன்னும் இன்னும்
எத்தனையோ தலைப்புகள் இருக்கே!
மொத்தத்தில்
பாவல(கவிஞ)ன் என்பவர்
மக்களாய(சமூக) ஓட்டைகளுக்குள்
நடப்பவற்றை எழுதவேண்டியவரே!
காதலியையோ காதலனையோ
எண்ணி எண்ணிக் கிறுக்கும்
தலைவிகளே தலைவர்களே
பாவல(கவிஞ)ன் என்பவர்
கரும்கல்லுக்கப்பால் நிகழ்வதையும்
நாளை நடக்கக்கூடியதை இன்றும்
எண்ணி எண்ணிக் கிறுக்குபவரே!
அடே! யாழ்பாவாணா!
நாம்மாலையும்
பாவல(கவிஞ)ராக முடியுமென்போர்
உலகின் மூலைமுடுக்கெங்கும்
நடந்த, நடக்கும், நடக்கவுள்ள
உங்கள் உள்ளத்தை
தாக்கிய, நோகடிக்கும் எதையும்
எண்ணி எண்ணி எழுதுங்களேன்!
"பாவல(கவிஞ)ர் வாக்கு
பொய்த்ததில்லை" என்ற
உண்மையில் என்ன இருக்கும்
அவரது
தூரநோக்கு முடிவோ தீர்வோ தான் - அது
அவரையே
பாவல(கவிஞ)ர் என்று சாற்றுகிறதே!

அறிவுக்கண்ணால பாருங்க...



காதல் என்பது
யார் மீதும்
எந்நேரமும் வரலாம்
அந்நேரம்
மணமானவர்கள்
கணவனை / மனைவியை நினைவூட்டுங்க...
மணமாகாதவர்கள்
காதலனென்றால்
நல்ல வருவாய்க்காரனாகவும்
காதலியென்றால்
பணத்தைச் சேமிப்பவளாகவும்
பார்த்துக் கொள்ளுங்க...
காதல் வந்ததும்
கண்ணை மறைக்கும் என்கிறாங்க...
அதுங்க
அறிவுக் கண்ணைத் தானுங்க...
அதுதானுங்க
காதல் வந்ததால்
வரவேண்டிய அறிவைச் சொன்னேனுங்க!
நான் சொன்னா
நீங்க கேட்க மாட்டியளே...
இப்படித்தானுங்க
நாலு பிள்ளைக்காரனுங்க
நாலாம் பிள்ளையின் அகவையிலே
நாலு பிள்ளைகளை
பொழுதுபோக்காகக் காதலித்தானுங்க...
நடுச்சந்தியிலே காதலி நாலும்
ஒன்றாய்ச் சந்திக்கையிலே
ஒன்பது பெண்களிடம்
நாலு பிள்ளைகளைக்காரன்
நல்லாய் வேண்டிக்கட்டினானுங்க...
என்னங்க - நீங்க
தலையைச் சொறியிறதைப் பார்த்தால்
கணக்குப் புரியவில்லையோ
கணக்குப் பார்க்கத் தெரியாதோ
என்றெல்லோ
நான் நினைச்சேன்...
என்றாலும் சொல்லிவிடுகிறேன்
பொழுதுபோக்காகக் காதலித்த பெண்கள்
மனைவியின் நண்பர்களாம்...
அவரின் அந்த நாலு காதலிகளும்
மனைவியோட அவரும்
அவரோட நாலு பிள்ளைகளும்
சந்திச்சபோது தான்
அவரோட காதல் அரங்கேற
ஒன்பது பெண்களுமா
அவரை உதைத்துத் தள்ளிட்டங்கண்ணே!
ஓரறிவுக்கண்ணால
பின்விளைவைப் பார்க்காததாலே
பதினெட்டுக் கண்கள் பார்த்ததும்
போட்டுத் தள்ளிய கதையைவிட
இன்னொரு
சுவையான கதையைக் கேளுங்கண்ணே...
என்னையும் ஒருவள்
தனக்குள்ளே
என் மீது காதல் அரும்ப
"என்னைத் தான் காதலிப்பதாகவும்
நீங்க விரும்பினால்
உங்க மகனைக் கட்டிட்டு
உங்களுக்கு
மருமகளாயிடுவேன்" என்று
ஒருவருக்கும் தெரியாம
என் வீட்டை வந்து
என் இல்லாளிடம் கேட்க - அவளோ
அடுப்பில ஆட்டுக் கறிக்கு மூட்டிய
வேப்பந்தடி நெருப்புக் கொள்ளியால
"கண்ணில்லையாடி
என் கணவனையே காதலிப்பதாக
என்னட்டை வந்து கேட்க..." என்று
மூஞ்சியில சுட்டுக் கலைத்த கதை
நல்லாயிருந்ததண்ணே!
என் மனைவி
என்னை விட மொத்தம் தான்
ஆனால்,
என் மனைவிக்கு
நான் பிள்ளையாக இருக்கலாமென
நம்பிய பெண்ணுக்கு
அறிவுக்கண்ணில
ஏதும் பிழையிருக்கலாமண்ணே!
உப்பிடியான
கதைகளைப் பொறுக்கித் தானண்ணே
யாழ்பாவாணனனும் பா புனையிறானுங்க...
நானும்
உந்தக் கதைகளை வைத்து
"அறிவுக்கண்ணால பாருங்க..." என்று
தலைப்பிட்டு
பா புனையப் போறேனுங்க!

என் கிறுக்கல்கள்


எத்தனையோ படிப்பிருக்க
இலக்கியப் படைப்பாக்குவதை
படித்தமையாலே தான்
பாக்கள், கதைகள், நகைச்சுவைகள், என
என்னென்னவோ கிறுக்குவதாக
எவரும்
நினைத்துப் போடாதையுங்கோ...
மூ.மேத்தாவின் பொத்தகத்தைப் படித்தால்
புதுப் பா(புதுக்கவிதை) எழுத வருமென்றார்கள்...
கண்ணதாசனின் பொத்தகத்தைப் படித்தால்
நல்ல பாட்டு எழுத வருமென்றார்கள்...
சொன்னவர் சொற்கேட்டுப் படித்தேன்
பாவோ(கவிதையோ) பாட்டோ
என்னாலே எழுத முடிந்ததில்லையே!
சின்னஞ் சிறு அகவையிலே
படிக்கிறதென்றால் புளிக்குமே - நான்
படிக்கையிலே புளிக்கையிலே
உள்ளத்தால் உணர்ந்ததை எல்லாம்
எழுதிப் பார்த்த போது தான்
என் கிறுக்கல்களும் பாக்களோ என
என்னாலே உணர முடிந்தது என்பேன்!
"சிவாஜி, சாவித்திரி இருவருமே
பள்ளிக்குப் போகமலிருக்க - நான்
நடிச்சது போல நடிக்க மாட்டார்களே...
பாரதிராஜா, பாக்கியராஜா இருவருமே
தேர்வு எழுதாமிலிருக்க - நான்
சாட்டுப் போட்டு ஒளித்தது போல
ஒரு படமும் இயக்க மாட்டார்களே..." என
என்னாலே உணர முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
"படிப்பில பிடிப்பில்லாத வரை
எப்படித்தான் படித்தாலும்
படிப்பும் புளிக்கும் தானே...
படிக்கிறது என்பது விரும்புகிற வரை
எப்படித்தான் பார்த்தாலும்
படிப்பும் இனிக்கும் தானே..." என
என்னாலே வழிகாட்ட முடிந்ததை
எழுதுகையில் தான்
பாவோ(கவிதையோ) பாட்டோ
எழுத முடிந்ததே!
நல்ல தலைப்பைப் போட்டிட்டு
பாப்புனையக் குந்தினால்
என்னாலே பாப்புனைய முடிந்ததில்லை...
"இப்படி எழுதுகையில்
எப்படியோ பா(கவிதை) அமைகிறதே..." என
எழுதி முடிக்கையிலே தான்
தலைப்பு ஒன்றை வைத்து
பா(கவிதை) ஒன்று எழுதியதாக
நிறைவடைகிறேனே!
உண்மையைச் சொல்லப் போனால்
உள்ளம் நொந்த போதும்
மாற்றார் சுடுசொல் கேட்ட போதும்
எண்ணியதெல்லாம் எடுத்துச் சொல்ல
விரும்பிய போதெல்லாம்
தாளோடும் எழுதுகோலோடும்
விளையாடியதன் விளைவே
என் பாக்(கவிதை)கள் என்பேன்!
என் உள்ளத்தைப் புண்ணாக்கிய
என் உள்ளத்தைச் சுகப் படுத்திய
எதுவும் கூடத் தப்பாமல்
எவ்வாறு எனக்கிருந்தது என்பதை
அவ்வாறே எழுதியதால் தான்
என் கிறுக்கல்கள் கூட
பா(கவிதை) போல எனக்கிருக்கிறதே!

பாவலனால்(கவிஞனால்) முடியாதது ஏதுமுண்டோ?


நிலாவில் இறங்கி
நேரில் பார்த்தது போல
தரைக்குக் கீழே
இருக்கும் நிலைமையை
படம் பிடித்தாற் போல
கருங்கல் வேலிக்கு அப்பாலே
நடப்பதைக் கூட
நேரில் கண்டது போல
மக்களாயம்(சமூகம்) என்ற
வட்டத்திற்கு உள்ளே
ஊடுருவிப் பார்த்தது போல
நேற்றைய நடப்புகளை வைத்து
நாளைய எதிர்வைக் கூறக் கூடியதாக
சூழல் மாற்றங்கள் சுட்டும்
செய்திகளைக் கூறக் கூடியதாக
மூட நம்பிக்கைகளை
தூக்கி எறியக் கூடியதாக
வருங்கால வழித்தோன்றல்களுக்கு
வழிகாட்டக் கூடியதாக
வாழைப்பழத்தில
ஊசி ஏற்றுவது போல
நல்லறிவை ஊட்டக் கூடியதாக
எந்தச் சிக்கல்களுக்கும் எளிதான தீர்வை
முன்வைக்கக் கூடியதாக
வெள்ளையனை வெளியேற்ற
பாவாலே போரிட்ட பாரதியைப் போல
பாக்களைப் புனைபவனே
உண்மைப் பாவலன்(கவிஞன்)!
செந்தமிழில் விளையாடிய
பாரதிதாசனைப் பாரும்
பொதுவுடைமைக் கருத்துகளை முன்வைத்த
பட்டுக்கோட்டையாரைப் பாரும்
கோட்பாடுகளால்(தத்துவங்களால்) குறிவைத்து
நம்மாளுகளுக்கு வழிகாட்டிய
கண்ணதாசனைப் பாரும்
மக்கள் நினைவில் உருளும்
அவர்களது பாக்களில் உள்ள
எண்ணங்களை(கற்பனைகளை)
கணக்கிட்டுப் பாரும்
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
பா(கவி) பாடுமளவுக்கு
கம்பனின் பா(கவி) புனையும் திறத்தை
பலரும் உவமிப்பதையும் பாரும்
எத்தனையோ பாவலர்களைப் போல
எத்தனையோ எண்ணங்களை(கற்பனைகளை)
வெளிப்படுத்தினால் தானே
நல்ல பாவலன்(கவிஞன்) ஆகலாம்!
தெருவால போன அழகியைக் கண்டதும்
ஆடைகளைக் களைந்து
பாவிலே அழகை விவரிப்பதோ
காதலித்துத் தோல்வி கண்டதாலோ
காதல் உணர்வு தோன்றியதாலோ
பாவிலே காதலை விவரிப்பதோ
பாவலன்(கவிஞன்) என்று
அடையாளப்படுத்த உதவாதே!
தெருவிலே வாழ்வோர் நிலையை
தெருவில் கையேந்துவோர் நிலையை
பட்டினி வயிற்றின் நிலையை
ஊருக்குள்ளே உள்ள சீர்கேட்டை
பணி செய்யும் இடங்களில்
இடம் பெறும் கையூட்டு நிகழ்வை
கல்வி ஊட்டுவோர்
படிப்போரைக் கெடுக்கும் செயலை
அரசுகளின் ஓட்டை உடைசலுகளை
எண்ணிப் பார்த்தால்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
அத்தனையையும் பொறுக்கி
உங்கள் பாவிலே எடுத்தாள முனைந்தால்
நீங்கள் பாவலன்(கவிஞன்) தான்!
ஊரைச் சீர்படுத்தவும்
அரசை ஆட்டம் காண வைப்பதும்
உலகை ஒரு கணம் உலக்கவும்
எதைத்தான் சொன்னாலும்
பாவலனால்(கவிஞனால்)
முடியாதது ஏதுமுண்டோ?
சான்றுக்கு
கவிகாளமேகம் ஒருவரே
போதுமென்பேன்!
எந்த எழுத்தில் தொடங்கி
அந்த எழுத்திலே முடிப்பதற்கும்
எந்தச் சொல்லில் தொடங்கி
அந்தச் சொல்லிலே முடிப்பதற்கும்
எந்தப் பொருளிலும் எந்த நிகழ்வையும்
தன் பாவால் எடுத்தாண்டு
பொறாமை கொண்ட பாவலர்களை அடக்கி
அரசனிடம் பரிசு பெற்றதாக
காளமேகத்தின் பா புலமையைக் கூறும்
பொத்தகமொன்றில் படித்தேனே!
பாவலர்களாக(கவிஞர்களாக)த் துடிக்கும்
புதியவர்களே...
பாடுபொருள் மட்டுமல்ல
சிறந்த எண்ண வெளிப்பாடு
(கற்பனைத் திறன்)
பா புனையும் ஆற்றல்
எல்லாவற்றையும் கண்டு
வாசகர் களிப்படைந்தாலே
உங்கள் பாக்கள் வெற்றி பெறும்!
பாவலனாகும் எண்ணத்தில்
நான் படித்ததை
உமக்குரைத்த நான் கூட
உங்களைப் போன்ற புதிய பாவலனே!

வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது


ஏதாவது
எழுத வேண்டும் என எண்ணினேன்
எழுத்துகள் வந்தன
சொல்கள் வந்து குவிந்தன
மீண்டும்
எதை எழுதலாமென எண்ணினேன்
பா புனைய உள்ளமும் உடன்பட்டது
பாவிலே
துளிப்பா, குறும்பா, புதுப்பா...
ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா...
இன்னிசைப் பா என
எத்தனையோ என்னுள் மோதின
பாவைத் தெரிவு செய்வதற்கிடையில்
எழுதுகோலுக்கு மூச்சுப் போயிடுமென
எழுதத் தொடங்கினேன்!
அடுத்த வீட்டில்
"ஆவென்று அழுதது குழந்தை"
அப்படியே எழுதினேன்
குழந்தை ஏனழுமென எண்ண
"பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி" என
இரண்டாம் அடியைத் தொடுத்தேன்
மூன்றாம் அடியைத் தேடுகையில்
"பாலென்று பருக்கிட இயலாதவள்" என
மூன்றாவது அடியும் தலை நீட்டியதே!
வேண்டி வளர்ப்பவளுக்கு
மார்பை நெரிச்சுப் பிழிந்தாலும்
முலையால் பால் வராதென எண்ணி
"தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்" என
முடிக்க முனைந்த போது
"வளர்ப்புத் தாயிற்கு முலையில பாலூறாது" என
தலைப்பும் தானாக வந்ததே!
படித்துப் பாருங்கள்
நான் புனைந்த பாவிது!

ஆவென்று அழுதது குழந்தையுமே
பாலென்று பிஞ்சழும் எனஎண்ணி
பாலென்று பருக்கிட இயலாதவள்
தானென்று தன்னையே நோவாள்
ஏனென்று எண்ணாமல் வளர்ப்பவள்!

நானே
படித்துப் பார்த்த பின்
எனக்கோ குழந்தைகளில்லை
விருப்புக்கொரு குழந்தை வேண்டி
விரும்பியே வளர்க்கையில்
என்னவளும்
இப்படித்தான் துன்புறுவாளென
எண்ணிப் பார்க்கையிலே
என் உள்ளம் நோகிறதே!

Sunday, May 12, 2013

பாபுனையப் பொத்தகங்கள் சில...


உவன் யாழ்பாவாணன்
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என
தொடங்கியவர் தான்
உருப்படியாய்
இன்னும் முடித்தபாடில்லைக் காணும்...
போதாக்குறைக்கு
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
வந்திட்டாரென்று - நீங்கள்
உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ளலாம்!
"யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்" என்ற
தொடரைத் தொடர்ந்து கரை சேர்க்க
"பாபுனையப் பொத்தகங்கள் சில..." என
பொறுக்கித் தர முனைந்தது
பயிலுவோருக்கு இலகுபடுத்தவே!
மரபுப் பா(கவிதை) தொட்டு
புதுப் பா(கவிதை) வரையான
இலக்கண, இலக்கிய விளக்க நூல்கள்
அஆ, பாட்டு, உரைநடை இலக்கணங்கள்
சிறுவர் தமிழ் இலக்கியம்
நாட்டார் பாடல் இலக்கியம் என
அறுபதிற்கு மேற்பட்ட
தலைப்புகளின் கீழ்
ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்களை
தொகுத்துத் திரட்டியுள்ளேன் என்றாலும்
"படைப்பாளியாக முயல்வோருக்கு" என
யாப்பறிந்து பாபுனைய வந்தோருக்கும்
வழிகாட்டல் நூல்கள் இருக்குப் பாரும்!
தமிழ் நலம், தமிழர்(உள, உடல்) நலம் பேண
வழிகாட்டல் நூல்கள் பலவும் இருக்கு
உலகின் எட்டுத் திக்கிலும் வாழும்
நம்மாளுகள் அறிந்திட உதவுங்களேன்!
தமிழை மறந்தவர் தமிழ் பயில
ஆங்கில வழியில்
தமிழ் பயிலும் நூல்களும் இருக்கு
உண்ணான
வெள்ளைக்காரனும்
தமிழ் படிக்க உதவும் என்றே
யாழ்பாவாணனின்
மின்நூல் களஞ்சியத்தை
உலகிற்கு அறிமுகம் செய்ய
முன்வாருங்கள் உறவுகளே!

மின்நூல் களஞ்சியத்தைப் பார்வையிட கீழ் வரும் இணைப்பைச் சொடுக்குக:
http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

நீங்களும் மின்நூல் களஞ்சியம் அமைக்கலாம். முதலில "யாழ்பாவாணன் என்ன தான் பண்ணிட்டாரு!" என்ற பக்கத்தைப் பாருங்கள்.
http://yarlpavanan.wordpress.com/2013/05/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/